Tuesday, 1 September 2015

“ மது பாட்டில்களால் ஏற்படும் விபத்துக்கள்,உயிரிழப்புகள்.....”

மது அருந்தினால் விட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. மதுவிலக்குப் போராட்டம் மிகத் தீவிரமாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப் புரட்சிகரமான போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு இக்கட்டுரையை எழுதி உள்ளேன். எனினும் இக்கட்டுரை மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து எழுதப்பட்டதல்ல, மாறாக மது பாட்டில்களால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் குறித்து இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. மதுவினால் மட்டும் விட்டிற்கும் நாட்டிற்கும் கேடு அல்ல, மது பாட்டில்களாலும் கேடு என்பதை விளக்கவே இக்கட்டுரையை எழுதி உள்ளேன்.

பொதுவாக மது அருந்துபவர்கள் பெரும்பாலும் பாரில்,டாஸ்மாக்கில், விடுதியில், மறைவான இடங்களில், லாட்ஜில், நண்பர்கள் தங்கும் அறையில், போன்ற இடங்களில் தான் மது அருந்துவார்கள். ஆனால் இப்பொழுது புதிதாக மது அருந்துவதற்கு என்றே ஒரு நாள் சுற்றுலா செல்ல தொடங்கிவிட்டார்கள். இயற்கையை ரசித்தவாரே, தண்ணீரில் நினைந்தவரே, தண்ணீரில் மிதந்துக் கொண்டே மது அருந்த வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். இத்தகைய ஆசையை தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்கையில் அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள இயலாது. எனவே தங்களது ஆண் வட்ட நண்பர்களோடு, தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாள் சுற்றுலாவாக தங்களது இருப்பிடத்திற்கு அருகமையில் இருக்கும் ஏற்காடு, பொள்ளாச்சி டாப் ஸ்லிப், வால்பாறை,பைக்காரா, முதுமலை, கொடைக்கானல் போன்ற பசுமை நிறைந்த வனப்பகுதிக்குச் செல்கிறார்கள். பசுமை நிறைந்த வனப்பகுதிக்கு உள்ளே சென்று மது அருந்திவிட்டு, பீர் பாட்டில்களை உடைத்துவிடுகிறார்கள் அல்லது பிற இடங்களில் எரிந்து விடுகிறார்கள். இத்தகைய பாதைகளில் கிடக்கும் உடைக்கப்பட்ட மது பாட்டில்களில் மேல் யானை கால் வைத்தால் உடைக்கப்பட்ட மது பாட்டில்களின் பகுதி அதன் பாதங்களுக்குள் முழுக்கப் புகுந்துவிடும். மேலும் யானை சிறிது சென்றால், பாட்டிலின் பாகங்கள் நன்றாக கால்களுக்கு உள்ளே செல்லும். சில தினங்களுக்கு பிறகு யானையின் கால்களில் சீழ் பிடிக்கும், புழுக்கள் பாதங்களுக்கு உள்ளே நுழையும், மேலும் புழுக்கள் சதையைத் துளைத்து, சீழை உள்ளே கொண்டு செல்லும், யானையின் கால்கள் பெரிதாக வீக்கம் அடையும், யானை நடக்க முடியாமல்,உணவு, தண்ணீர் அருந்தாமல் பல நாட்கள் தவித்து, அதே இடத்தில் யானை இறக்கும். இவ்வாறு யானைகள் தொடர்ந்து இறந்தால் காடுகளின் வளம் பாதிக்கப்படும். காடுகளின் வளம் பாதிக்கப்பட்டால் சுற்றுச்சுழல் மாசுடைதல், வெப்பநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. யானைகள் காட்டில் இருந்தால் மட்டுமே அக்காடு வளம் நிறைந்த காடகக் கருதப்படும். யானைகளை போலவே காட்டில் வாழும் காட்டு எருமைகள், மான்கள் போன்ற விலங்குகளும் மது பாட்டில்களால் பாதிக்கப்படுகின்றன.


குளம், குட்டை, வாய்கால் போன்ற பகுதிகளில் மது அருந்துபவர்கள், அதன் கரைகளிலே மது பாட்டில்களை உடைத்துவிடுகிறார்கள். அவ்வாறு உடைக்கப்பட்ட பாட்டிலின் பகுதிகள் அதன் கரைகளில் இருக்கும் சேற்றில் சிக்கிக் கொள்கின்றன. அத்தகைய பகுதிகளில் செல்வோர் தவறுதலாக  சேற்றில் கால் வைக்கும் பொழுது, அங்கு உடைக்கப்பட்ட பாட்டிலின் பகுதிகள் அவர்களின் கால்களை பதம்பார்க்கின்றன. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

இதனை போன்றே அருவிகளில் மது அருந்திவிட்டு பாறைகளில் மது பாட்டிலை வீசி உடைக்கிறார்கள். அவ்வாறு உடைக்கப்பட்ட மது பாட்டிலின்  கூர்மையான பகுதிகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு, அங்கு குளிப்பவர்களின் தோல்களில் காயம் ஏற்படுத்துகின்றன. சில சமையங்களில் முழு பாட்டில்கள் தண்ணீரால் இழுத்து வரப்பட்டு, அருவிகளில்  மேலிருந்து கிழே குளிப்பவர்களின் தலையில் விழுந்து உடைகிறது. இதனால் மக்கள் காயம் அடைகிறார்கள்.

பேருந்துகளில் சுற்றுலா செல்லும் ஆண்கள் பேருந்துகளிலே மது அருந்திவிட்டு, பேருந்து செல்லும் பொழுது, மது பாட்டிலை வேகமாக சாலையில் எறிகிறார்கள். அவ்வாறு எறியப்பட்ட பாட்டில் ரோட்டில் உடையப்பட்டு ‘டமார்’ என்று ஓசை எழுகிறது. மேலும் அவ்வோசை எழும் பொழுது அனைவரும் திரும்பிப் பார்க்கும்பொழுது, தான் செய்த காரியம் அனைவரின் கவனத்தை ஈர்த்து விட்டதாகவும், தான் ஒரு மாஸ், கெத்து என்று தங்களுக்குள் ஒரு கர்வம், தோற்றம் ஏற்படுத்துக் கொள்கின்றனர். அவ்வாறு சாலையில் உடைக்கப்பட்ட பாட்டில்களால் பல வாகனங்களின் டயர் பஞ்சர் ஆகி விபத்துகள் நிகழ்கின்றன. சிலச் சயமங்களில் இவ்விபத்து உயிரிழப்பில் முடிகிறது.

சாலை ஓரங்களில் வாகனத்தில் அமர்ந்து மது அருந்துபவர்கள், மது பாட்டில்களை குப்பை தொட்டியில் அல்லது அதன் பக்கத்தில் வீசி உடைக்கிறார்கள். மேலும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை கையில் அல்லும்பொழுது உடைக்கப்பட்ட பாட்டில்களின் மூலம் காயம் அடைகிறார்கள்.    

மனிதன் தான் அடையும் சில மணி நேர போதைக்கும், இன்பத்துக்கும் வன விலங்குகளை அழிக்கிறான், காட்டின் வளத்தை அழிக்கிறான், சக மனிதனுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்துகிறான். எனவே மது பாட்டில்களாலும் நாட்டிற்கு கேடு. மது விலக்கை அமல்படுத்துவோம், இதன் மூலம் மது பாட்டில்களால் மது அருந்துவோர் ஏற்படுத்தும்  தீமை கட்டுப்படுத்துப்படும்.  

குறிப்பிடல்:
1.http://www.albanytamilsangam.org/vishvesh/ED_2.htm                

சதீஸ் கார்க்கி

கோவை